
திருச்சி, கோட்டை காவல் சரகத்திற்கு உள்பட்ட தேவதானம் பகுதியில் அரசு மதுபான கடையோடு இணைந்த பார் ஓன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பாரில் சஞ்சீவி நகரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகன் கற்குவேல் (வயது: 44) தனது நண்பரான மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் மது அருந்தச் சென்றார். அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த சுப்பிரமணி, ராஜூ மற்றும் கண்ணாயிரம் ஆகிய மூவரும் மது போதையில் உரக்க பேசிக் கொண்டிருந்தனர்.
இதை சரவணன் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு இரு தரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு கைகலப்பாக மாறியது.
அப்போது சுப்பிரமணி தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் கற்குவேலின் தலையில் அடித்தார். இந்த திடீர் தாக்குதலில் நிலை தடுமாறி கீழே விழுந்த கற்குவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சரவணன் கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கியதில் சுப்பிரமணியன், ராஜூ, கண்ணாயிரம் மூவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த சுப்பிரமணி, ராஜூ ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட கண்ணாயிரம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற மதுபான பார் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக எந்நேரமும் இங்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதனால், இங்கு அடிக்கடி தகராறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த மதுபான கடை மற்றும் பாரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் பேரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகறாரில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
