
டெல்லியில் தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சுகேஷ் தான் மிரட்டி மற்றும் மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட பகுதியை பாலிவுட் நடிகைகள், மாடல் அழகிகளுக்காக செலவு செய்தான். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது நடிகைகளை சிறைக்கே வரவழைத்து அவர்களுக்கு பணமும், பரிசும் கொடுத்தான்.
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுபொருட்கள் மற்றும் பணத்தை சுகேஷ் கொடுத்துள்ளான். இதனால் அவர்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இருவரும் தம்பதிகள் போன்று இருந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சுகேஷ் சந்திரசேகர் பரோலில் வெளியில் வந்த போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் சென்னைக்கு தனி விமானத்தில் சென்று சுகேஷை பார்த்துவிட்டு வந்த தகவலும் வெளியானது.
தற்போது சுகேஷ் செய்த மோசடியில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ஜாக்குலினுக்கு சுகேஷ் சிறையில் இருந்து கொண்டு அடிக்கடி கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளான்.
அதோடு ஆடம்பர படகு போன்றவற்றை வாங்கி ஜாக்குலினுக்கு பரிசாக அளிப்பதையும் சுகேஷ் வழக்கமாக கொண்டுள்ளான். சமீபத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாயார் கிம் பெர்னாண்டஸ் மும்பை மருத்துவமனையில் காலமானார்.
கிம் பெர்னாண்டஸ் கார்டன்
இதையடுத்து கிம் பெர்னாண்டஸ் பெயரில் ஒரு கார்டனை வாங்கி அதனை ஜாக்குலினுக்கு சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக சுகேஷ் வெளியிட்டுள்ள செய்தியில், ”பாலி தீவில் விவசாயம் நடந்து கொண்டிருந்த ஒரு பெரிய பகுதியை நான் வாங்கி இருக்கிறேன். இப்போது அது முற்றிலும் தனியார் தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இது ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாயார் கிம் பெயரில் உள்ளது. உனது அம்மாவின் நினைவாக, இந்த தோட்டத்தை இன்று ஈஸ்டர் பரிசாக உனக்கு பரிசளிக்கிறேன். அன்பே, இந்த மோசமான நேரத்தில் நான் உனக்காக உன்னுடன் இருக்கிறேன் என்பதை உனக்கு உணர்த்தவும், ஆறுதல் கூறவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். உன்னை சுற்றியுள்ளவர்கள் நடிப்பார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த நலனுக்காக மட்டுமே, அது உனக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன்.

வாடிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
பேபி உனது அம்மா நிச்சயமாக நமது மகளாக மறுபிறவி எடுப்பார். அன்பே, இன்று நான் உனக்குக் கொடுக்கும் உன் ஈஸ்டர் பரிசைப் பார்க்க நீ அப்பாவுடன் செல்ல வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன். ஏனெனில் அது அம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அங்கு உனது அம்மா இருப்பதை நீ நிச்சயமாக உணருவாய். வாடிகன் தேவாலயத்தில் காலமான உனது அம்மாவிற்காக சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்தேன். பேபி அம்மா நம்முடன் நம்மை சுற்றி இருக்கிறார். அம்மாவின் மரணம் எனக்கும் வேதனையை கொடுக்கிறது. குறுகிய காலத்தில் அம்மா என்னுடன் நெருக்கமாகிவிட்டார். அவர் இவ்வளவு குறுகிய காலத்தில் நம்மை விட்டு செல்வார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை”என்று தெரிவித்தார்.
சுகேஷ் சிறையில் இருந்து கொண்டு அடிக்கடி ஜாக்குலினுக்கு கடிதம் எழுதுவதை எதிர்த்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனாலும் சுகேஷ் தொடர்ந்து ஜாக்குலினுக்கு தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறான். இப்போது ஜாக்குலின் அது பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை. சுகேஷ் ஜாக்குலினுக்கு கொடுத்த பரிசுப்பொருட்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பல முறை இதற்காக ஜாக்குலின் டெல்லி போலீஸார், சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.