
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். உலகம் முழுக்க நடந்த அல்லது நடக்க இருந்த 7 போர்களை தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்காக எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு காஸாவில் இஸ்ரேல் நடத்தி வந்த கொடூரமான தாக்குதலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்.
இரண்டு ஆண்டுகளாக காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தார்மீக ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது அதே அமெரிக்கா, இஸ்ரேலிடம் போரை நிறுத்துங்கள் என்று சொல்லி இருக்கிறது.
இஸ்ரேலும் போரை நிறுத்துவதாக அறிவித்ததோடு, போரை நிறுத்தப் பாடுபட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பரிந்துரைத்தார்.
இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நாட்டை மண்ணோடு மண்ணாக மாற்றிவிட்டு இப்போது அவர்களே போரை நிறுத்திவிட்டோம் என்று கூறி நோபல் பரிசு கொடுங்கள் என்று கேட்பதாக இஸ்லாமிய நாடுகள் குற்றம் சாட்டின. ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை.
அவருக்குப் பதில் வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காகப் பாடுபட்ட அந்நாட்டு பெண் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசைப் பெற்ற பிறகு மரியா கொரினா மச்சாடோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ”இந்த பரிசைப் பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களுக்கும், எங்களது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன். இன்று நாங்கள் வெற்றியின் வாசலில் இருக்கிறோம்.
எப்போதும் விட அதிகமான சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக ஜனநாயக நாடுகள் எங்களுக்கு முக்கிய உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
நோபல் பரிசு வழங்கிய குழுவினர் வெளியிட்ட செய்தியில், “வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நியாயமான மற்றும் அமைதியான வழியில் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கான மாற்றத்தை அடைவதற்கும் மரியா கொரினா மச்சாடோவின் அயராத உழைப்பைப் பாராட்டுகிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
வெனிசுலா தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ வாக்குகளைத் திருடிக்கொண்டதாகக் குற்றம் சாட்டிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கடந்த ஒரு ஆண்டாகத் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். வெனிசுலா தேர்தலில் போட்டியிட மரியா கொரினா மச்சாடோவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தனது ஆதரவாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.
டொனால்டு ட்ரம்பிடம் பேசிய மரியா கொரினா மச்சாடோ
நோபல் பரிசு வென்ற மரியா அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் போனில் பேசினார். இது குறித்து டொனால்டு ட்ரம்ப் இன்று அளித்த பேட்டியில், ”நோபல் பரிசு பெற்றவர் இன்று என்னை அழைத்து, ‘உங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்; ஏனென்றால் நீங்கள் உண்மையிலேயே அதற்குத் தகுதியானவர்’ என்று கூறினார். ஆனால், எனக்கு நோபல் பரிசு கொடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அவர் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நான் அவருக்குப் பல சந்தர்ப்பங்களில் உதவி செய்தேன். செய்து கொண்டிருந்தேன். பேரழிவின் போது வெனிசுலாவில் அவர்களுக்கு நிறைய உதவி தேவைப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
டொனால்டு ட்ரம்ப் பெயர் அடுத்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிசீலிக்கப்படலாம் என்று நோபல் பரிசு கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.