
ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள 30 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இலங்கையின் தொடர் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 4 விசைப்படகுகளையும், அதிலிருந்த 30 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை அக்.23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள 30 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கினர்.