
2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற `சாம்பியன்’ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்தியா தோல்வி முகத்தில் சென்றது.
இலங்கை அணியிடம் இந்தியா 27 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை இழந்தது. அடுத்தது, டெஸ்ட் வரலாற்றில் சொந்த மண்ணில் முதல்முறையாக நியூஸிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது.
அதைத் தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் தொடரில் 10 வருடங்களுக்குப் பிறகு தொடரை இழந்தது.
இந்த 2 டெஸ்ட் தொடர் தோல்விகளால் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
இவ்வாறு கம்பீர் பயிற்சியில் தோல்வி முகத்தில் சென்றுகொண்டிருந்த இந்திய அணி ரோஹித் கேப்டன்சியில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
அதைத்தொடர்ந்து, ரோஹித், கோலி இல்லாத கில் தலைமையில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழக்காமல் டிரா செய்தது. கடந்த செப்டம்பரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆசிய கோப்பையை வென்றது.
தற்போது, சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் முதல் போட்டி வெற்றியுடன் இரண்டாவது போட்டியில் ஆடி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் தொடருக்குப் பிறகு ஆடிய அனைத்து தொடர்களிலும் தோல்வியடையாமல் நல்ல டிராக்கில் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா.
இந்த நிலையில், இந்திய அணியில் தனது கோச்சிங் கரியர் பற்றி மனம் திறந்திருக்கிறார் கம்பீர்.

இந்திய முன்னாள் வீரரும், ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ராவுடனான நேர்காணலில் பேசிய கம்பீர், “உலகின் சிறந்த அணியாக நீங்கள் இருக்க விரும்பினால் அதுவொரு விஷயமே அல்ல.
என்னைப் பொறுத்தவரை சொந்த மண்ணில் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது முக்கியமல்ல. சொந்த மண்ணைப் போல வெளிநாட்டு மண்ணிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற சொந்த மண்ணில் மட்டும் ஆதிக்கம் செலுத்தினால் போதும் என்பதில் பெரிதாக நம்பிக்கையில்லை.
ஏனெனில், சொந்த மண்ணில் மட்டும் ஆதிக்கம் செலுத்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியனாக இருக்க நீங்கள் தகுதியற்றவர்கள் ஆவீர்கள்” என்று கூறினார்.

மேலும், நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ஆகாஷ் சோப்ரா கேட்டதற்குப் பதிலளித்த கம்பீர், “எனது கோச்சிங் கரியரில் அதை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. எனது வீரர்களிடமும் கூறியிருக்கிறேன்.
எதிர்காலத்தை நோக்கிச் செல்வது முக்கியம்தான். அதேசமயம் சில நேரங்களில் கடந்த காலத்தையும் திரும்பிப் பார்ப்பது முக்கியம்.
ஏனெனில் கடந்த காலத்தை நீங்கள் மறந்துவிட்டால், எல்லாவற்றையும் நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்வீர்கள்” என்று தெரிவித்தார்.