• October 11, 2025
  • NewsEditor
  • 0

இந்திய சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து திரைத்துறைகளிலும் ஒத்துப்போகக்கூடிய, அதேசமயம் விவாதத்துக்குரிய விஷயம் நெப்போட்டிசம் (Nepotism).

எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவர் சினிமாவில் ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைத்துவிடாதா என்று வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வருடக்கணக்கில் உழைத்துக் காத்திருப்பதும், மறுபக்கம் தனது குடும்பத்தில் இருப்பவர்கள் அதே சினிமாவில் இயக்குநராகவோ, தயாரிப்பாளராகவோ, ஹீரோவாகவோ, இசையமைப்பாளராகவோ, பாடகராகவோ இருப்பதாலேயே ஒருவர் எளிதில் ஹீரோ முதல் எந்தவொரு வாய்ப்பையும் எளிதாகப் பெறுவதும் நீண்ட காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சினிமா

அப்படி எளிதாகக் கிடைத்த வாய்ப்பில் அவர் வெற்றி பெற்றாரா அல்லது போராடி வெற்றிபெற்றாரா அல்லது வெற்றியைத் தக்கவைக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

சினிமாவில் ஒருவர் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருப்பதற்கும், இன்னொருவருக்குத் தோற்றுக்கொண்டே இருந்தாலும் வெற்றிபெறும் வரை வாய்ப்பு கொடுக்கப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பிற துறைகளில் இந்த நெப்போட்டிசம் இல்லையா என்றால் அதை மறுத்துவிடவும் முடியாது. அதுவும் விவாதத்துக்குரியதுதான்.

இந்த நிலையில், இந்தி சினிமாவின் மறைந்த பழம்பெரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர் ராஜ் கபூர். அவரின் பேரனும், சினிமாவில் அவரைப்போலவே பன்முகம் கொண்ட மறைந்த ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூர், தான் நெப்போட்டிசம் மூலம் வந்தவன் என்றும், வாழ்க்கை தனக்கு எளிதாகக் கிடைத்ததாகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ராஜ் கபூர், குரு தத் ஆகியோர் பற்றிய நிகழ்ச்சியொன்றில் பேசிய ரன்பீர் கபூர், “நான் நெப்போட்டிசம் மூலம் வந்தவன். வாழ்க்கை எனக்கு எளிதாகக் கிடைத்தது. ஆனால், எப்போதும் நான் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

ஏனெனில் நான் இதுபோன்ற குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதையும், எனக்கென்று தனிப்பட்ட பாணியை உருவாக்கவில்லையென்றாலோ, எனக்கென்று ஒரு பெயரை உருவாக்கவில்லையென்றாலோ திரைத்துறையில் நான் வெற்றிபெற முடியாது என்பதையும் நான் உணர்ந்தேன்.

என் குடும்பத்தின் நிறைய வெற்றிகளைத்தான் நீங்கள் கொண்டாடுகிறீர்கள். ஆனால், தோல்விகளும் நிறைய இருக்கின்றன.

வெற்றியிலிருந்து எவ்வளவு கற்றுக்கொள்கிறீர்களோ, அதே அளவு தோல்வியிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்” என்றார்.

2007-ல் தனது 25 வயதில் `சாவரியா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வளர்ந்திருக்கும் ரன்பீர் கபூர், தற்போது இந்தியாவில் அதிக பட்ஜெட் படமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் `ராமாயணா’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் நெப்போட்டிசம் குறித்த உங்களின் பார்வையை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *