
சென்னை: 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்துக்கு ஒருமுறையும், பெண் 4 மாதத்துக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்த தான நாள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று, தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்கள், இணையதளத்தில் பதிவு செய்த தன்னார்வ ரத்தக் கொடையாளர் களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கினார்.