
புதுடெல்லி: ‘‘இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் பார்க்கிறது’’ என இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை கடந்த 2021-ம் ஆண்டு வெளியேறியது. அதன்பின் அங்கு ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் காபூலில் செயல்பட்டு வந்த தூதரகத்தை இந்தியா மூடியது. ஒராண்டு கழித்து வர்த்தகம், மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்காக மட்டும் சிறு அலுவலகத்தை காபூலில் இந்தியா திறந்தது. சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கி உட்பட சுமார் 1 டஜன் நாடுகள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் தூதரகத்தை வைத்துள்ளன.