
புதுடெல்லி: கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட மறுசீரமைப்புக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2,221 கோடியை விரைவாக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், "பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முழு தொகையான ரூ.2,221.03 கோடியை அவசரமாக விடுவிக்க கேட்டுக்கொண்டேன். இதை கடனாக அல்லாமல், மானியமாக வழங்க வேண்டும் என கோரினேன். மேலும், கோழிக்கோடு அருகே கினலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.