
கோவை: தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும் என்று கோவையில் நேற்று தொடங்கிய உலகளாவிய ‘ஸ்டார்ட்அப்’ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு சார்பில், உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ இரண்டு நாள் மாநாடு கோவையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழகம் ஈர்த்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் தளத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 50 சதவீதம், பெண்கள் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்கள் ஆகும்.