
சண்டிகர்: ஹரியானாவில் தற்கொலை செய்துகொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் பி குமார், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், அக்டோபர் 7 அன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், ஏடிஜிபியாக இருந்தார். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக உள்ளார். புரன் குமார் தற்கொலை செய்துகொண்ட அன்று, ஹரியானா முதல்வர் சைனி தலைமையிலான குழுவில் இடம்பெற்று ஜப்பானில் இருந்தார். தனது கணவரின் மரணச் செய்தி கிடைத்ததும் அவர் புதன்கிழமையன்று இந்தியா திரும்பினார்.