
புதுடெல்லி: சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுவித்தும் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அரசு தரப்பு குற்றச்சாட்டை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க தவறியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் ஸ்ரீதேவி தம்பதியின் 6 வயது மகள் ஹாசினி. இவர் கடந்த 2017 பி்ப்.5-ம் தேதி திடீரென மாயமானார். மாங்காடு போலீஸார் நடத்திய விசாரணையில், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மற்றும் சரளா தம்பதியின் 22 வயது மகனான தஷ்வந்த், சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து பின்னர் எரி்த்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தஷ்வந்த் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.