
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பங்கேற்க தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை கடந்த செப். 29-ம் தேதி கரூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிர்வாகி பவுன்ராஜ் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன், “வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.