
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வழங்குமாறு, கடந்த மே 1-ல் டெல்லி பிரதமர் அலுவலகத்தின் பெயரில் ஒரு கடிதம் திருமலைக்கு வந்தது.
அனைவருக்கும் மே 10-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு கோயில் பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆனால் வந்தவர் பிரதமர் அலுவலக துணை செயலாளர் தானா என கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு மெயில் அனுப்பியது. இதனை பரிசீலித்த பிரதமர் அலுவலக உதவி இயக்குநர் ஏ.கே.சர்மா, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.