
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி முதல்வர் கோப்பைக்கான ஜோதியை ஏற்றிவைத்து, கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு வீரர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் கோப்பைக்கான போட்டிகளை திருவிழாபோல சர்வதேச தரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறோம். 2023-ல் நடந்த போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து, தற்போது 16.28 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் விளையாட்டை மக்கள் இயக்கமாக கொண்டாடி வருவதற்கு, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளும் முக்கியக் காரணமாகும்.