
புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு சுமார் 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும் இன்னும் இலாகா ஒதுக்காமல் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.
இதனிடையே, பட்டியல் இனத்தைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சரவையிலிருந்து தூக்கியது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், அரசுக்கு எதிராக பகிரங்கமாக வெடித்திருக்கும் சரவணன்குமார், அமைச்சரவையில் பட்டியல் இனத்தவருக்கு இடம் தராமல் ஒதுக்கியது, கரசூரில் தொழிற்சாலைகளை கொண்டு வரும் குழுவில் தொகுதி எம்எல்ஏவான தன்னை சேர்க்காமல் இருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். இதற்கெல்லாம் இன்னும் 15 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் தொகுதி மக்களுடன் சேர்ந்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவேன் என மிரட்டியும் இருக்கிறார் சரவணன்குமார்.