
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசினார். இந்தச் சம்பவத்துக்கு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி முதல் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
இதற்கிடையில், காலணி வீசிய வழக்கறிஞர் கிஷோருக்கு எதிராக நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிந்து சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் திருமாவளவன் செல்லும் கார் சென்றபோது வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது மோதியிருக்கிறது.
In a shocking display of hooliganism in broad daylight, VCK goons allegedly assaulted a lawyer, simply for questioning a car driver who had hit him. The car, notably, was carrying VCK leader Thiru @thirumaofficial.
Ironically, what makes it worse is that Thiru @thirumaofficial… pic.twitter.com/ZOk8fm9gm9
— K.Annamalai (@annamalai_k) October 7, 2025
இதனால் கோபமடைந்த அந்த வழக்கறிஞர் திருமாவளவனின் கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். உடனே அங்கிருந்த விசிக தொண்டர்கள் கூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவரின் பதிவில், “பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில், விசிக குண்டர்கள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்திய தலைமை நீதிபதியை அவமதித்தவருக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய திருமாவளவன் காரில் இருந்திருக்கிறார். ஆனால் அவரது கட்சித் தொண்டர்கள் சிறிது நேரத்திலேயே ஒரு வழக்கறிஞரைத் தாக்கியிருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.