
கோவை: கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள, தென்னிந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரைச் சூட்டிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டுக்கு நாளை (அக். 9) திறந்து வைக்கிறார். கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.1,791.23 கோடியில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் சிறப்புகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தப் பாலத்தின் ஓடுதள அகலம் 17.25 மீட்டராகும். இதில் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு வழித்தட உயர்மட்டப் பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன், தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது.