
சென்னை: தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு, கடலோர காவல்படை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடுக்கடலில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, மாசு தடுப்பு ஒத்திகை சென்னை அருகே சுமார் 20 கிமீ தொலைவில் கடல் பகுதியில் கடலோர காவல்படை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால், கடலோர காவல் படை கப்பல்கள் விரைந்து சென்று தீயை அணைப்பது, அதிலுள்ள பணியாளர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பது, கடலில் தத்தளிக்கும் பணியாளர்களுக்கு விமானம் மூலமாக மிதவை உபகரணங்களை போடுவது, இரவு நேரங்களில் பிரத்தியேக ஒளி விளக்கை வானில் ஏவி, பிறர் உதவியை கோருவது, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், டார்னியர் விமானம் மூலமாக கண்டறிவது, சிறப்பு மாசு தடுப்பு கப்பல்கள் மூலம் மிதவைகள் மூலமாக கடலில் எண்ணெய் பரவாமல் தடுப்பது, அவற்றை ஸ்கிம்மர்கள் மூலமாக உறிஞ்சுவது, கடலில் தத்தளிப்பவரை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் மிதவையை கொண்டு சென்று மீட்பது உள்ளிட்ட ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.