
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (40) என்பவர் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு அன்புராஜ் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள உறவினர்களைப் பார்க்க சென்றுள்ளார். பின்னர் இரவு சேலம் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பெட்ரோல் தீர்ந்துவிட்டது.
இதனால் அன்புராஜ் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் வாங்கிக்கொண்டு சாலையைக் கடந்துள்ளார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த லாரி ஒன்று அன்புராஜ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அன்புராஜ் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார். இந்த விபத்தை அறிந்த காரிப்பட்டி காவல் நிலைய போலீசார் உடனே சம்பவ இடம் சென்று அன்புராஜின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமை காவலர் அன்புராஜ் மீது மோதிய லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதியதில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.