• October 5, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தவர் லட்சுமிபிரியா. இவர், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த சக்திமுருகன் என்பவரது மனைவி.

33 வயது நிரம்பிய இவர் கடந்த 2016-ம் வருடம் சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தார்.

2025-ம் ஆண்டு மணமேல்குடி காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிமாறுதலில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், இவர் மணமேல்குடி வடக்கூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த சூழலில், காலாண்டு விடுமுறைக்கு குழந்தைகளைத் தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் மட்டும் தனியே இருந்துள்ளார்.

மணமேல்குடி காவல்நிலையத்தில் பகல் வேலைகளை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் நேற்று காலை பணிக்குச் செல்ல தனது காவல் சீருடையை அயர்ன் செய்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சாரம் அயர்ன் பாக்ஸ் மூலம் லட்சுமி பிரியாவைத் தாக்கி உள்ளது. இதில், வீட்டில் யாரும் இல்லாததால் காப்பாற்ற முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா

காலை 8 மணிக்கு மணமேல்குடி காவல் நிலையத்திற்கு வேலைக்கு வராததால் மேலும் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டும் எடுக்காததால் சக காவலர்கள் வீட்டிற்கு சென்று பூட்டிருந்த கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, மின்சாரம் தாக்கி லட்சுமிப்ரியா இறந்தகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே தகவலறிந்து வந்த கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி தலைமையிலான போலீஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சப் -இன்ஸ்பெக்டர் இறப்பு குறித்து மணமேல்குடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு, இறந்த சப் -இன்ஸ்பெக்டருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் சக காவலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *