
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சி பெரிய பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது: 29). ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். இவர், திருச்சி மாவட்டம், கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பெரிய பனையூரில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜோதிகா என்ற பெண் ஆட்டோ டிரைவர் கார்த்திக் தாக்கியதாக கொடுத்த புகாரின் படி நங்கவரம் காவல் நிலைய போலீஸாரால் வழக்குபதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் தனது சித்தப்பா வீட்டில் தனது இரண்டு தங்கைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஐந்து நபர்கள் வீட்டின் தகரக் கதவை உடைத்து வீட்டுக்குள் உள்ளே வந்தனர்.
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் சுவர் பகுதியில் பயத்துடன் மறைந்து ஒளிந்து கொண்டார். ஆயுதங்களுடன் வந்த ஐந்து நபர்கள் எங்கே கார்த்திக் என கேட்டபோது, அவரது தங்கைகள் புவனா மற்றும் ரம்யா, ‘அண்ணன் இல்லை’ என்று தெரிவித்துள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை அடித்து பார்த்தபோது மறைந்திருந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்கை கண்டுபிடித்து, கொடூர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த படுகொலையில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் லோகநாதன், முருகன் மகன் கிஷோர், தங்கமுத்து மகன் பூபதி மற்றும் இரண்டு நபர்கள் உட்பட 5 நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டனர். தங்களது அண்ணன் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த இரண்டு தங்கைகளும் கதறி அழுதனர். அருகில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் நங்கவரம் போலீஸார் குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், டி.எஸ்.பி செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு,கரூர் எஸ்.பி-க்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, கரூர் எஸ்.பி ஜோஸ் தங்கையா படுகொலை செய்யப்பட்ட வீட்டில் நேரில் பார்வை செய்து இரண்டு தங்கைகள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட கார்த்திக் தாய் தந்தையரிடம் விசாரணை மேற்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட கார்த்திக் உடலை உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இது குறித்து கைரேகை நிபுணர்கள் மற்றும் லக்கி மோப்பநாய் வரவழைக்கப்பட்டு படுகொலை செய்த நபர்கள் விட்டுச் சென்ற காலணிகள் (செருப்பு) மற்றும் சிதறி கிடந்த ரத்தத்தை மோப்ப நாய் மோப்பம் பிடித்து கொலைகாரர்கள் தப்பி ஓடிய நச்சலூர் தார் சாலையில் சுமார் 500 மீட்டர் சென்று நச்சலூர்-மாடு விழுந்தான் பாறை பிரிவு சாலையில் நின்று கொண்டது. இதுகுறித்து நங்கவரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஐந்து பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், அவர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட திருச்சி மாவட்டம், இனாம்புலியூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(வயது: 23), குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் காலனியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது: 28), திருச்சி மாவட்டம், போதாவூர் வடக்கு மேட்டை சேர்ந்தவர்களான மனிதவாசு(வயது: 19), மகாதேவன் (வயது: 20) உள்ளிட்ட நான்கு பேர்கள் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி சசிகலா முன் சரண் அடைந்தனர். ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.