
தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்குத் திருட்டைக் கண்டித்து கையெழுத்து பிரசார ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டு தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராஜேஷ் குமார், ” ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரின் விருப்பம், காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை நாங்கள் பிரதிபலிக்கிறோம். காங்கிரஸ் தேசியக் கட்சி தமிழ்நாட்டை 30 ஆண்டுகள் ஆட்சி செய்தது.
1967 க்கு பிறகு ஆட்சியில் இல்லை. ஆனாலும் எங்களுக்கு அதிகப்படியான சீட்டுகள் தர வேண்டும், காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்க கூடிய அரசு வர வேண்டும் என்று எங்களுடைய அகில இந்திய தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் அது குறித்து முடிவெடுப்பார்கள். கரூர் சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம் அந்த மக்களுடைய துக்கத்தில் பங்கேற்றோம். மருத்துவமனையில் இருந்தவர்களையும் சந்தித்தோம்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தோம். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது அதன் அறிக்கை வந்த பிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும். கரூருக்கு வந்தது எல்லோரும் தவெகவினர் கிடையாது விஜய் என்ற நடிகரை பார்க்க வேண்டும் என்று வந்தவர்கள் தான் அதிகம்.
கரூர் சம்பவத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கடமை தவெக கட்சிக்கும் உள்ளது, தமிழக அரசுக்கும் உள்ளது. கரூர் துயரச் சம்பவம் குறித்து முதலமைச்சரிடமும், தவெக தலைவர் விஜய்யிடமும் ராகுல் காந்தி கேட்டறிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரங்கலைத் தெரிவித்து நிவாரண உதவி வழங்கியுள்ளார் ஆனால் இதில் அரசியலை புகுத்த விரும்பவில்லை என்றார்.