
கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில், உடலில் காயங்களுடன் ஒரு மக்னா யானை கடந்த ஒரு வாரமாக சுற்றி கொண்டிருக்கிறது. அந்த யானை கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தமிழக வனப்பகுதியான கூடப்பட்டி என்கிற கிராமத்தின் அருகே வந்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து வருகிறார்கள். யானை தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளுக்கு மாறி மாறி சென்று வருகிறது. இதன் காரணமாக யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
காயமடைந்துள்ள மக்னா யானையை இரண்டு மாநில வனத்துறையினரும் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அந்த யானை பவானி ஆற்றில் நின்று கொண்டிருக்கிறது. வனத்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில்,

இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மக்னா யானைக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. வாழை, பலா, பழங்கள் மூலம் மருந்து வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “யானை மருந்துகளை உட்கொள்ள தொடங்கியுள்ளது. தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுகிறது. மருத்துவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் யானையை கண்காணித்து வருகிறார்கள்.

தற்போது யானை பவானி ஆற்றின் மையப்பகுதியில் நிற்கிறது. எனவே யானை சிகிச்சை அளிப்பதில் சற்று சிக்கல் நிலவுகிறது. யானை தண்ணீரில் இருந்து வெளியேறியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்.” என்றனர்.