• October 4, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. பாஜக எம்.பிக்களின் விசாரணைக் குழுவும் தனியாக பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்திருந்தனர்.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் – நடிகர் விஜய்

சமீபத்தில் இராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மணிப்பூர் கலவரத்தின்போது அங்கு உடனே செல்லாத பாஜக விசாரணைக் குழு, கரூருக்கு மட்டும் உடனே அனுப்பி வைக்கப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்துப் பேசியிருந்தார். இது விவாதப்பொருளாக வெடித்த நிலையில் இதற்கு பாஜகவினர் பதிலளித்து வருகின்றனர்.

அவ்வகையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் பாஜக மாநிலத் துணை தலைவர் குஷ்பு, “மணிப்பூர் வேறு கரூர் வேறு. இரண்டையும் ஒப்பிட்டுப் பேச முடியாது. மணிப்பூரில் நடந்தது எல்லைப் பிரச்னை. மணிப்பூரில் நடந்த கொடூரத்திற்காக நானே தலைகுனிந்து நிற்கிறேன். ஆனால், கரூர் பிரச்னை என்பது முற்றிலும் வேறு. தனிப்பட்ட அரசியல் தாக்குதலுக்காக இரண்டையும் ஒப்பிட்டு பேசுவது முட்டாள்தனம்.

குஷ்பு

விஜய் அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அரசு SIT மூலமே விசாரணை நடத்துகிறது. விஜய் மன்னிப்புக் கேட்டுவிட்டார், சம்பவ இடத்திற்குச் செல்வதில் இருக்கும் சிக்கல்களையும் எடுத்துச் சொல்லிவிட்டார். 2 நிமிடத்தில் நூடுல்ஸ் செய்வதைப் போல எல்லாத்தையும் செய்து தீர்வு கொடுக்க முடியாது. இந்த விஷயத்தில் விசாரணைக் குழுவின் அறிக்கைக்குப் பிறகே எதுவும் பேசமுடியும்.

இந்த கரூர் சம்பவத்தில் முதல்வரிடம், இந்த திமுக அரசிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கின்றன. ஆனால், ஏன் என்று கேள்வி கேட்டாலே முதல்வர் ஸ்டாலின் காதில் பஞ்சை வைத்து ‘Mute mode’க்குச் சென்றுவிடுகிறார்” என்று பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *