
“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும் கேட்டைத் திறக்காததால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என கணிக்கும் கட்சிகளைத் தேடி தூதுவர்களை அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் தான், பழைய பகையை எல்லாம் மறந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தேடிச் சென்று சந்தித்துப் பேசி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
பாமகவில் தந்தை – மகன் அரசியல் யுத்தம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்வதால், இவர்களில் யாரை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறது அதிமுக. திமுக-வையும் முதல்வர் ஸ்டாலினையும் அன்புமணி மிகக் கடுமையாக சாடுவதால் அவர் தங்கள் பக்கம் தான் வருவார் எனக் கணிக்கும் அதிமுக, அவர் மட்டும் வந்தால் போதாது ராமதாஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாமக-வும் தங்கள் அணிக்கு வந்தால் தான் பலம் சேர்க்கும் என நினைக்கிறது.