
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சென்னை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று மாலை: நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன – மாலை 6 மணிக்கு..” என்று பதிவிட்டிருந்தார். விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, ”என் இல்லத்திற்கு காவல் துறை கைது செய்ய வந்துள்ளது.” என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.