• October 4, 2025
  • NewsEditor
  • 0

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம், பார்லி கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ராணுவ வீரர்கள் குழு ஒன்று, வீரமரணம் அடைந்த தங்கள் சக ஊழியரின் சகோதரிக்குச் சகோதரர் பொறுப்பை ஏற்று செய்த செயல், அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறது.

மணப்பெண் ஆராதனா என்பவரின் சகோதரர், ஆஷிஷ் குமார், இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வந்தவர். அவர் 2024 பிப்ரவரி மாதம், அருணாச்சலப் பிரதேசத்தில் ‘ஆபரேஷன் அலர்ட்’ பணியின்போது வீரமரணம் அடைந்தார். இதனால், ஆராதனாவின் திருமணத்தில், ஒரு சகோதரர் இருக்கவேண்டிய முக்கியமான இடம் வெற்றிடமாக இருந்தது.

திருமண நிகழ்ச்சியில்

இந்தச் சூழ்நிலையை அறிந்த ஆஷிஷ் குமாரின் ரெஜிமென்ட்டைச் (Regiment) சேர்ந்த சக ராணுவ வீரர்களும், சில முன்னாள் ராணுவ வீரர்களும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, மறைந்த தங்கள் தோழனின் சகோதரிக்குச் சகோதரர் கடமையைச் செய்ய திருமண மண்டபத்திற்கு வந்தனர். இது ராணுவ வீரர்களிடையே இருக்கும் பணி சார்ந்த பிணைப்பைத் தாண்டிய ஒரு ஆழ்ந்த சகோதரத்துவப் பிணைப்பைப் பறைசாற்றியது.

ராணுவ உடையில் வந்திருந்த அந்தச் சகோதரர்கள், மணப் பெண்ணான ஆராதனாவைத் திருமண மேடைக்கு (மண்டபத்திற்கு) அழைத்துச் செல்லும் மிக முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். பொதுவாக அண்ணன் அல்லது தம்பி செய்யும் இந்தச் சடங்கை ராணுவ வீரர்கள் ஓர் அணியாகச் சேர்ந்து செய்தபோது, அந்தத் திருமணத்தில் கூடியிருந்த அத்தனை விருந்தினர்களின் கண்களிலும் கண்ணீர் மல்கியது.

திருமணச் சடங்குகளின்போது, ராணுவ வீரர்கள் ஆராதனாவைத் திருமண மேடைக்கு அழைத்துச்செல்லும் முக்கியப் பொறுப்பை ஏற்று நிறைவேற்றினர். மேலும், அவர்கள் தங்கள் ஆதரவையும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக, ஆராதனாவுக்கு ஒரு நிலையான வைப்புத்தொகையை (Fixed Deposit) திருமணப் பரிசாக வழங்கினர்.

இது, மறைந்த சகோதரனின் பெயரால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது. இறுதியாக, மணப்பெண் தன் புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டுச் செல்லும்போதும், ராணுவ வீரர்கள் உடன் சென்று, ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவாகச் செய்தனர்.

ஒரு தியாகியின் குடும்பத்திற்கு தேசம் என்றும் துணை நிற்கும் என்பதையும், இந்திய ராணுவ வீரர்கள் வெறும் போர் வீரர்கள் அல்ல, அவர்கள் உன்னத பாசக்கார சகோதரர்கள் என்பதையும் நிரூபித்த இந்தக் காட்சி, அங்கே கூடியிருந்த அனைவரின் மனதிலும் நீங்காத இடம்பிடித்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *