
காமராஜரின் வாழ்க்கை கதையை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘வெல்கம் பேக் காந்தி’ என்ற பெயரிலும் தனது ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய, ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் திருக்குறளை மையமாக வைத்து ‘திருக்குறள்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். திருக்குறளை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், யூடியூப் தளத்தில் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலகிருஷ்ணன் பேசும்போது, “இந்தப் படம் வெளிவந்த போது, நல்ல விமர்சனங்கள் வந்தன. ஆனால் திரையரங்குக்கு ஆட்கள் வரவில்லை. அதனால், மக்களிடம் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் யூடியூப்பில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்து வெளியிட்டுள்ளோம். இப்படம் உலகம் எங்கும் போய்ச் சேரும். காலம் கடந்தும் நிற்குமென நம்பிக்கை உள்ளது” என்றார். தயாரிப்பாளரும் நடிகருமான பி.எல். தேனப்பன், சித்ரா லட்சுமணன், ராம்ராஜ் குழுமத் தலைவர் கே.ஆர். நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.