
திருச்சி: திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த அமைப்பின் நிர்வாகிகள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு சார்பில் கடந்த 28-ம் தேதி இரவு ஆசிவக திருமால் வழிகாட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் 6 பேர் ராமர் படம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அவமதித்ததுடன், தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். மேலும், ராமரை இழிவாகப் பேசியதுடன், ராவணனைப் போற்றும் வகையில் பேசியுள்ளனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.