
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் என் வீட்டில் நடைபெற்ற ஒரு சிறிய சம்பவத்தை உங்களுக்கு சொல்கிறேன். என் மகள் நிதாரா வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்படி விளையாடும் போது, எதிர் தரப்பில் விளையாடும் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து குறுந்தகவல்கள் வரும். எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் ஆணா, பெண்ணா என்று பல கேள்விகள் வரும்.
அப்படி கேட்ட போது, பெண் என்று என் மகள் பதில் அனுப்பினாள். உடனே எதிர் தரப்பில் விளையாடி கொண்டிருந்த அந்த நபர், ‘உங்கள் நிர்வாண படத்தை அனுப்ப முடியுமா?’ என்று என் மகளுக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என் மகள், உடனே வீடியோ கேமை அணைத்து விட்டு, நடந்த விவரத்தை என் மனைவியிடம் கூறினாள்.