
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயிரிழப்பு நேரிட்ட நிலையில், கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.