
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா பாண்டே. இந்து மகாசபை தலைவராக இருக்கிறார். தன்னை ஆன்மிகத் தலைவராக காட்டிக்கொள்ளும் பூஜா பாண்டேக்கு ஏற்கனவே திருமணமாகி அசோக் பாண்டே என்ற கணவர் இருக்கிறார்.
பூஜாவுக்கு பைக் ஷோரூம் வைத்திருக்கும் அபிஷேக் குப்தா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் அவர்களுக்குள் நாளடைவில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது.
அலிகர் பேருந்து நிலையத்தில் அபிஷேக் குப்தா தனது தந்தை, உறவினர் ஜீது ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அங்கு பஸ்ஸில் வந்தபோது அபிஷேக் குப்தாவின் தந்தை நீரஜ் மற்றும் உறவினர் ஜீது ஆகியோர் பஸ்சில் ஏறிவிட்டனர்.
ஆனால் அபிஷேக் குப்தா பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பாக அங்கு பைக்கில் வந்த இரண்டு பேர் அபிஷேக் குப்தா மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அபிஷேக் குப்தா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நீரஜ் குப்தா போலீஸில் கொடுத்துள்ள புகாரில், அசோக் பாண்டேயும், அவரது மனைவி பூஜா பாண்டேயும் சதி செய்து கூலிப்படை வைத்து தனது மகனைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அசோக் பாண்டேயைக் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக மொகமத் பாசில் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ”கைது செய்யப்பட்டுள்ள பாசிலிடம் விசாரித்தபோது, பூஜா பாண்டேயும், அவரது கணவர் அசோக் பாண்டேயும் சேர்ந்து ரூ.3 லட்சம் தருவதாகக் கூறி அபிஷேக்கைச் சுட்டுக் கொலை செய்யும்படி கூறி பாசில் மற்றும் ஆசிப்பிடம் கூறியுள்ளனர்.
இதில் முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தனர். இதையடுத்து பாசிலும், அவரதுகூட்டாளி ஆசிப் என்பவரும் சேர்ந்து இக்கொலையைச் செய்துள்ளனர். அசோக் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி பூஜா மற்றும் ஆசிப்பைத் தேடி வருகிறோம்” என்றார்.
போலீஸ் அதிகாரி ஜாதுன் இது குறித்து கூறுகையில்,
“அபிஷேக் தந்தை தனது மகனை அசோக் பாண்டேயும், அவரது மனைவி பூஜாவும் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து பூஜாவை கைது செய்ய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பூஜாவிற்கும் அபிஷேக்கிற்கும் இடையில் உள்ள உறவு குறித்தும் விசாரித்து வருகிறோம்.
கைது செய்யப்பட்டுள்ள பாசிலுக்கு அசோக் பாண்டே குடும்பத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அபிஷேக் குப்தாவை கொலை செய்ய யாரையாவது கூலிப்படையை தயார் செய்யும்படி பாசிலிடம் அசோக் பாண்டே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாசில் தனது நண்பர் ஆசிப்புடன் சேர்ந்து இக்கொலையை செய்ய முடிவு செய்து அசோக் பாண்டே மற்றும் பூஜாவை சந்தித்துள்ளனர்.
அவர்கள் இருவரிடமும் அபிஷேக் குப்தாவின் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கு ரூ.3 லட்சம் பேசப்பட்டு ஒரு லட்சம் ரொக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் இரண்டு பேரும் முதலில் ஒத்திகை பார்த்துக்கொண்டு இக்கொலையை செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

இது குறித்து அபிஷேக் தந்தை நீரஜ் குப்தா கூறுகையில்,
“எனது மகனுக்கும் பூஜாவிற்கும் இடையே உறவு இருந்தது. எனது மகன் திருமணம் செய்தபோது பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.
எனது மகன் பைக் ஷோரூம் ஆரம்பித்தபோது அதில் தன்னை பங்குதாரராக சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஒருமுறை பூஜா என்னை நேரில் பார்த்தபோது உனது மகன் மிகவும் ஸ்மார்ட்டாக நடந்து கொள்கிறான் என்று தெரிவித்தார்.
எனது மகன் அவரை விட்டு சென்றுவிடுவார் என்று பயந்தார். எனது மகன் பூஜாவின் நம்பரை பிளாக் செய்துவிட்டான். இதனால் கோபத்தை என்னிடம் காட்டினார்” என்று தெரிவித்தார்.
ஆனால், தங்களுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லை என்றும், அதேசமயம் அபிஷேக்கை தங்களது குடும்பத்திற்கு மிகவும் தெரியும் என்று அசோக் பாண்டே தெரிவித்தார்.