
புதுடெல்லி: ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியா உலகத்துக்கு ஏராளமான விஷயங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், இந்திய அமைப்பில் சில பிழைகள் உள்ளன. அதனை எதிர்கொள்வதில் இந்தியா சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகள் உள்ளன. ஜனநாயக அமைப்பு அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. ஆனால் தற்போது, அந்த ஜனநாயக அமைப்பு பல திசைகளிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது” என்றார்.