
சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்.3) முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும்.நாளை திருவள்ளூர், சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வரும் 5-ம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.