
பான் இந்தியா என்ற வார்த்தையை கேட்டாலே மிக முக்கியமாக ஞாபகம் வரும் படங்கள் மூன்று. ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’. இவற்றில் முந்தைய இரண்டு படங்களும் உருவாக்கத்தின் போதே நடிகர்கள், பிரம்மாண்ட பட்ஜெட் என அனைத்தும் இந்திய அளவில் பரவலான கவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே எடுக்கப்பட்டவை. ஆனால் ‘காந்தாரா’ அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. அது முழுக்க மண் சார்ந்த, வட்டார மொழியுடன் கூடிய ‘ஆர்கானிக்’ ஆக எழுதப்பட்ட ஒரு படம். இத்தனைக்கு அப்படம் வெளியான போது தமிழில் கூட டப் செய்யப்படவில்லை. ஆனால், அப்படத்தின் திரைக்கதையும், அட்டகாசமான மேக்கிங்கும் அப்படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்து ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலிக்கச் செய்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘காந்தாரா’வின் முன்கதையாக வெளியாகியுள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
முதல் பாகத்தின் இறுதியில் நாயகன் மறையும் இடத்திலிருந்து தொடங்கும் கதை, அதற்கு காரணத்தை ஒரு புராணக் கதையின் வழியே சொல்கிறது. காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது. இதில் மன்னனின் மகன் விஜயேந்திரன் (ஜெயராம்) மட்டும் தப்பிவிடுகிறார்.