
சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் நேற்று பூஜைப் பொருட்களை வாங்குவதற்காக திரண்ட பொதுமக்களால் கடைவீதிகள் மற்றும் முக்கிய சந்தைகள் களைகட்டின. நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சந்தைகள் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது.
குறிப்பாக, ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் அக்.5-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறுகிறது. இதில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்ய தனியாக ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் அமோகமாக விற்பனை நடைபெற்றது.