
பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், விசாயாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.9 எனப் பதிவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பயமும் குழப்பமும் ஏற்பட்டது.
இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம் பெயர ஆரம்பித்துள்ளனர். இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
இதுவரை 31 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையைத் திரும்பப்பெற்றிருக்கிறது.