
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்திருக்கிறது.
இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து அருணா ஜெகதீசனுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,
“கரூர் சம்பவம் குறித்து அரசு அமைத்திருக்கும் தனிநபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
உயிரிழப்புக்கு ஆளான 41 குடும்பங்களிலும் நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள்.
அந்தக் குடும்பங்களில் வேலைவாய்ப்புக்கு வயதுடையவர்களையும் கல்வி கற்கும் வாய்ப்புடையவர்களையும் அரசுக்கு நீங்கள் அறிக்கையில் குறித்து அறிவிக்க வேண்டும்.
பலியானோர் பலரும் அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்து நலிந்தவர்கள்தாம். வேலைவாய்ப்பும் கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும்.
இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும் இருப்பவர்களுக்கு நீதி செய்வதுமே அறமாகும்.
இந்தப் பணியை நீங்கள் இப்போதே முடித்திருந்தால் அது சமூக தர்மமாகும். உங்கள் அறிக்கை பட்டழிந்தோர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்கும் சுட்டு விரலாகட்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.