
நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் ‘வீர தமிழச்சி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கரூர் நெரிசல் மரணங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.
“இரண்டு நாட்களாகத் தூக்கம் வரவில்லை. கரூர் சம்பவத்தில் விலைமதிப்பு இல்லாத உயிர்களை இழந்திருக்கிறோம்.
பொதுவாக அரசியல் கூட்டங்களுக்குச் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்.
கூட்டங்களில் பங்கேற்பவர்கள் கொஞ்சம் தூரத்திலிருந்தே பாருங்கள். உயிரை இழந்த குடும்பங்கள் எப்படித் தத்தளிக்கும்.
எவ்வளவு வேதனையில் இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்து விஜய்யின் மனசு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும்.
இறந்தவர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து நடிகர் விஜய்க்கும் ஆதரவாக நிற்போம்.
யாரும் எதிர்பார்க்காமல் நடந்த ஒரு விபத்து. போன உயிர்களை இறைவனாலும் மீட்டெடுக்க முடியாது.
இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும்.

அரசியல் தலைவர்களும் சரி, கட்சி நிர்வாகிகளும் சரி, காவல்துறையும் சரி ஒவ்வொரு தலைவர்களுக்கும் எவ்வளவு கூட்டம் கூடுமோ? அதற்கு ஏற்றமாதிரி இடங்களை ஒதுக்கிப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று திரையுலகத்தின் சார்பாக நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.