
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேற்று ஆறுதல் கூறினர். மேலும், சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கும் ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் மோடி எங்களை இங்கு அனுப்பி வைத்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம். இதில் பலர் பேசக்கூட முடியாத அளவுக்கு துக்கத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ஏழை மக்கள்.