
கரூர்: தவெக நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) கூறப்பட்டுள்ளதாவது: கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்காக மத்திய மண்டல ஐ.ஜி., கரூர் எஸ்.பி. மேற்பார்வையில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.