
பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 4 பெண்கள் பிரஜ்வலுக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டார்.