
சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு பழைய கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் தவறுகளாக 48 வயதான பெண் ஒருவர் விழுந்திருக்கிறார். கிட்டத்தட்ட 54 மணி நேரத்திற்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்படி, செப்டம்பர் 13ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு நடந்து சென்றிருக்கும்போது ஆழமான கிணற்றில் ஜின் என்பவர் தவறுதலாக விழுந்திருக்கிறார்.
மறுநாள் அவர் காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து மீட்புக் குழுவினர் அவரை தேடும் முயற்சியை செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கினர்.
ட்ரோன் உதவியுடன் அவரைத் தேடி வந்தனர். இதற்கிடையில் ஜின் அந்த கிணற்றின் சுவரைப் பிடித்து ஒட்டிக்கொண்டு இருக்கிறார். சுவரைப் பிடித்துக் கொண்டு கால்களில் நீச்சல் அடித்துக்கொண்டு, அவர் அந்த 54 மணி நேரத்தையும் கடந்திருக்கிறார்.
மீட்பு குழுவினர்கள் அவரை செப்டம்பர் 15 அன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில் “நான் விரக்தியடைந்து முற்றிலும் உடைந்து போன தருணங்கள் இருந்தன. கிணற்றின் சுவரை விட்டுவிடலாம் என்று பலமுறை நினைத்தேன், ஆனால் பின்னர் என் அம்மா, அப்பா, கல்லூரியில் சேரத் தொடங்கிய என் மகள் ஆகியோரை யோசித்து விடாமல் அந்த சுவரைப் பற்றிக் கொண்டு இருந்தேன்.
கிணற்றின் அடிப்பகுதி மிகவும் இருட்டாக இருந்தது. கொசுக்கள் நிறைந்திருந்தன. அருகிலேயே சில நீர் பாம்புகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு முறை நீர் பாம்பு என் கையில் கடித்தது. ஆனால் அது விஷம் அல்ல. எந்த தீங்கும் ஏற்படாமல் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளேன்” என்று கூறியிருக்கிறார். அவர் கைகளில் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்திருக்கின்றனர்.