
சென்னை: காலி பாட்டில்களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 20 மாவட்டங்களில் 1,800 கடைகளில் இத்திட்டத்தை டாஸ்மாக் செயல்படுத்தி வருகிறது. இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
காலி மதுபாட்டில்களை சேமிக்க இடமில்லை, பாட்டில்களை கையாள போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தால் பணியாளர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை அறிந்து, அவற்றை எவ்வாறு சரி செய்வது என்று மண்டல முதுநிலை மேலாளர்கள் தலைமையில் குழு அமைத்து ஊழியர்கள் கூட்டத்தை நடத்தி, பணியாளர்களின் சுமைகள் குறித்தும் ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியது.