
சென்னை: கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எவரும் எதிர்பாராத இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த செப். 14 முதல் மாவட்ட வாரியான பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கிய விஜய், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரைக் காண ரசிகர்கள், தொண்டர்கள் மிக அதிக அளவில் திரண்டதால், அவர்களைக் கட்டுப்படுத்துவது காவல் துறைக்கு சவாலாக இருந்தது. மேலும், பல இடங்களிலும் பொதுச் சொத்துகள் சேதமடைந்தன.