
நாகப்பட்டினம்: மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், எங்கள் கொள்கையில் இருந்து மாறமாட்டோம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கில் வெற்றிப் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக நடப்பாண்டு 236 வட்டாரங்களில் 369 பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதற்கான தொடக்க விழா நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.