
இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்த நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுபடி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் துரதிஷ்டவசமான சம்பவம். இதில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்திக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் பேரணியில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மற்றும் துயரமான கூட்ட நெரிசலால் ஆழ்ந்த துயரமடைந்தேன், இதில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களிண் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும், நிவாரணம் மற்றும் உடனடி மருத்துவ உதவிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.”