
கடந்த 23-ம் தேதி 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறவிருப்பவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும்.
2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கு திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் சாண்டி, நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா உட்பட பலருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது குறித்து நடிகர் விக்ரம் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு விருது கொடுத்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்த அறிக்கையில் நடிகர் விக்ரம் பிரபு, “2022 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் நான் பெருமையும், பணிவும் அடைகிறேன்.
இந்த அங்கீகாரத்திற்காக அரசிற்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சக ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் பார்வையாளர்கள், உங்கள் நிலையான அன்பு மற்றும் ஊக்கத்திற்கு நன்றி.
இந்த அங்கீகாரம் எனக்குச் சொந்தமானது போலவே உங்களுக்கும் சொந்தமானது.
சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது, நான் தொடர்ந்து அதற்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.