
சண்டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நிலவும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்களே சாட்சியாக உள்ளன என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சித்து, இந்தியா மீது 50 சதவீத வரிவிதித்தது. இந்நிலையில் விமானப்படையில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மிக்-21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி சண்டிகரில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி, விமானப்படை தளபதி ஏ.பி.சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.